ஜெம் மருத்துவமனை சார்பில் சர்வதேச அளவிலான மாநாடு

கோவையில் ஜெம் மருத்துவமனை நடத்தி வரும் “லேப்ரோசர்ஜ்” மாநாட்டின் 9வது பதிப்பை ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகின்றன.

இம்மாநாட்டில், அறுவை சிகிச்சை நேரடி செயல்விளக்க முறைகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையிலிருந்து, மாநாடு நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திற்கு 60 அறுவை சிகிச்சை முறைகள் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் குறைந்தபட்ச கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்ய தேவையான கருவிகள், 125 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு செவிலியருக்கான பயிற்சிகள், விலங்குகள் பரிசோதனை நிலையம், என்டோஸ்கோபி பயிற்சி, அறுவை சிகிச்சை அரங்கு, வீடியோ எடிட்டிங் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்றவைகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இந்திய நவீன கருவிகள் அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் சிஜே வர்கீஸ் துவக்கி வைத்தனர்.

இதில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு, நாடு முழுவதும் நுண்துளை அறுவை சிகிச்சை முறையை கற்பதில் உள்ள சிக்கல்களை களைய, லேப்ரோசர்ஜ் மாநாடு எவ்வாறு உதவியது என்பது பற்றி விளக்கினார். மேலும் இணை இயக்குனரானா டாக்டர் பிரவீன் ராஜ், இது போன்ற மாநாடுகள் அறுவை சிகிச்சையின் தரத்தை உயர்த்தவும், அறுவை சிகிச்சையை மறுஆய்வு செய்யவும் வாய்ப்பாக அமையும் என்றார்.