தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்கள்

புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மூத்த வீரர்,வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா, கர்நாடாகா, தமிழ்நாடு, டில்லி, அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாகக் கோவையிலிருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில்,45 வயதுக்கு அதிகமானோர் பிரிவில் கோவையைச் சேர்ந்த மோகன்குமார் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்,மற்றும் நான்கு நூறு மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கம் என இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இதே போல 60 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் உயரம் தாண்டுதலில் பிரவீண் குமார் ஒரு வெள்ளியும்,நாற்பது வயதுக்கு உட்பட்ட பிரிவில் சங்கீதா குமார் வட்டு எறிதலில் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.இந்நிலையில் கோவை திரும்பிய வெற்றியாளர்களைக் கோயமுத்தூர் தடகள சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இதில் குழந்தைகள் மூத்த வீரர்,வீராங்கனைக்கு ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டப்பந்தய வீரர் மோகன் குமார் மூத்தோர் தடகள போட்டிகளைத் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும்,குறிப்பாக இது போன்ற போட்டிகளுக்குச் செல்லும் போது இரயில் பயணம் போன்ற செலவுகளுக்குச் சலுகைகள் அறிவிக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.