ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் பேச்சு போட்டி புதுயுகம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அகில் இறுதிப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுச் சாதனை படைத்தார்.
சென்னை, புதுச்சேரி, நெல்லை, மதுரை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 10 மண்டலங்களில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டிகளின் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள், கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன.
இடைநிலைப் பிரிவில் மண்டல அளவில் முதல் பரிசு பெற்ற 12 மாவட்டங்களைச் சேர்ந்த 12 மாணவ மாணவியர் சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியில் அண்மையில் கலந்து கொண்டனர். அவர்களில் அகில் இரண்டாம் பரிசு பெற்றார். மேலும், மேல்நிலைப் பிரிவில் 11 மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களில், தேஷ்னா ஊக்கப்பரிசினைப் பெற்றார்.
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டாம் பரிசு பெற்ற சி.அகில் மற்றும் ஊக்கப் பரிசு பெற்ற ஆ.ச.தேஷ்னா ஆகியோரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச்செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் கத்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.