விளம்பர பலகை நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகை நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகையின் மீதான நடவடிக்கை மற்றும் விதிகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எவ்வாறு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்? என்னென்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும்? எவ்வாறு விதிகளுக்குட்பட்டு விளம்பரங்கள் அமைக்கப்பட வேண்டும்? அனுமதியற்ற விளம்பர நிறுவனங்கள் மீதான புதிய சட்டத்தின் கீழ் தண்டனை என்ன? மேலும் ரயில்வே இடமாக இருந்தாலும், சாலை அருகே வைக்கப்படும் விளம்பர பலகைகளுக்கும் புதிய விதி பொருந்தும். மேற்படி ரயில்வே இடத்தில் பெரும்பாலான விளம்பரங்கள் விதிகளுக்குப் புறம்பாகவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையாளர் உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி, மற்ற பகுதியிலுள்ள விதி மீறிய நிறுவனங்களுக்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் செல்வ சுரபி, மண்டல உதவி ஆணையர்கள், நகரமைப்பு அலுவலர் மற்றும் மண்டல உதவி நகரமைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.