ராவ் மருத்துவமனை சார்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி 

ராவ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் லேடீஸ் சர்க்கிள் கிளப் எண் 11 ஆகியோர் இணைந்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை நடத்தினர்.

பெண்களை பொதுவாக பாதிக்கும் செர்விகல் கேன்சர் எனப்படும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன் காப்பது எளிதானது என்பதோடு, தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும் எனத் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராவ் மருத்துவமனை சார்பில் கோவையில் முதன் முறையாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை நடத்தினர்.

நிகழ்விற்கு  மருத்துவமனையின் இயக்குநர் ஆஷா ராவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகக் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் தடுப்பூசி குறித்து அதிகம் விழிப்புணர்வு தேவைப்படுவதாகக் கூறிய அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சி எனவும், இது எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய ஒரு செயலுக்கான முதல்  படியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மருத்துவர் ஆஷா ராவ் பேசுகையில், உலக அளவில் அதிக பேர் பாதிக்கப்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாகக் கூறிய அவர், பெண்கள் அனைவருக்கும் இப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியமாகி இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்க்கு மூலகாரணியாக இருக்கும் வைரஸ்  தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இருப்பதாகக் கூறிய அவர், 3 டோஸ்களாக இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இப்படியொரு தடுப்பூசி இருக்கிறது என்பது குறித்த தகவலே பலருக்கும் தெரிவதில்லை எனக் கூறினார். பெண்கள் திருமணத்துக்கு முன்பு கூட இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள, பரிந்துரைப்பதாகவும், இதனால்  வைரஸ்  தொற்று ஏற்பட்டாலும் கூட தடுப்பூசி வழியே அதற்கான எதிர்ப்புச்சக்தி உட்செலுத்தப்படும் போது அது புற்றுநோயாக மாறாது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இன்னர் வீல் கிளப் நிர்வாகி சாந்தி ராஜசேகர்,லேடீஸ் சர்க்கிள் தலைவர் ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.