கொங்குநாடு கல்லூரியில் பி.ஐ.எஸ். நிறுவன நாள் விழா

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் (BIS) கோயம்புத்தூர் கிளையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் மா. ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கோயம்புத்தூர், அறிவியல் மற்றும் தொழில்துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோகன் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் தரமுடையவையாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இந்தியப் பொருட்கள் நுகர்வோரால் விரும்பி வாங்கப்படும் நிலை உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாவதற்கு இந்தியப் பொருட்களின் தரம் இன்றியமையாதது என்றும் குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்குத் தரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர்

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டா் சி.ஏ. வாசுகி இவ்விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமை உரையாற்றினார். அவர் கூறியதாவது: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கல்லூரியில் கொண்டாடப்படுவதற்கு நன்றி தெரிவித்தார். வருங்கால பாரதத்தை உருவாக்குவது இன்றைய இளைஞர்களின் கைகள் என்றும் அவை இளமையாகவும் தூய்மையாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தரம் குறித்த செய்திகளை அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர் உள்ளிட்ட நம் முன்னோர்கள் ஆயிரமாயினும் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தொடக்கவிழாவைத் தொடர்ந்து இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மேலும், தரப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வினாடி – வினா, பேச்சுப் போட்டி, பதாகை தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவியர் திரளாகப் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் வி.கோபிநாத் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் லச்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினார்.