‘மக்களுடன் முதல்வர்’ – நன்றி தெரிவிக்கும் கோவை மக்கள்  

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து சிறப்பாக  செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், தொடங்கி வைக்கும் விதமாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்திடவும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, “கள ஆய்வில் முதலமைச்சர்” போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48  போன்ற முன்னோடி திட்டங்களையும் இவ்வரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் இன்றையதினம் கோயம்புத்தூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
“மக்களுடன் முதல்வர்“’ என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 13 அரசுத் துறைகளின்  சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக வரும் 18.12.2023 ஆம் தேதி முதல் 6.1.2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1745 முகாம்கள் நடத்தப்படும். முகாம்களில் பெறப்படுகின்ற மனுக்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள்ளாக உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்த கோயம்புத்தூர் மாவட்டம், இராமநாதபுரத்தை சேர்ந்த மங்கையர்கரசி  அவர்கள்தெரிவித்ததாவது,
என் பெயர் மங்கையர்கரசி. நான் இராமநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.  என்  கணவருக்கு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு  காரணமாக  அறுவைசிகிச்சையில் ஒரு கண்ணை முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டது. எனக்கு இரண்டு  குழந்தைகள்  உள்ளனர்.  அதனால் அவரால் எந்த வேலையும் செய்யமுடியாது. நான் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில்தான் குடும்ப செலவுகளை  கவனித்துகொள்கிறோம்.  வீட்டில் இருந்து என் கணவரையும் குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை. எனவே, தையல் பயிற்சி பெற்று தையல் தொழில் செய்யலாம் என்று தையல் தொழில் கற்றுக்கொண்டேன். ஆனால் தையல் இயந்திரம் வாங்கும் அளவுக்கு  என்னிடம் பொருளாதார வசதி இல்லை.
இந்நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் முகாம் நடைபெற்றது. இம்முகாம் குறித்து அறிந்து அங்கு சென்று அரசு அலுவலர்களிடம் விவரம் கேட்டேன். அதனைத்தொடர்ந்து, அம்முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்  இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பித்தேன்.   விரைவில் எனக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். என்னைபோன்ற ஏழைகளுக்கு உதவும் வகையிலும், விரைவில் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையிலும் இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த கோயம்புத்தூர் மாவட்டம், மரக்கடை பகுதியைச் சேர்ந்த என்.பேரிங் பாபு, அவர்கள் தெரிவித்ததாவது, என் பெயர் பேரிங்பாபு. நான்  மரக்கடையில்  வசித்து வருகிறேன்.   நான் ஆட்டோ மொபைல் கடை வைத்து இருக்கிறேன். எனக்கு இரண்டு  குழந்தைகள்  உள்ளனர்.  எனக்கு சொந்த கட்டடம் உள்ளது. முகம்மது அலி என்பவரின் பெயரில் இடத்தில் பட்டா இருக்கிறது. அதனை என் பெயரில் மாற்றவேண்டி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் நடைபெற்ற முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளேன்.
விரைவில் பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.