அ.தி.மு.க., கொடியை நாங்கள் பயன்படுத்துவோம்

நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம்;எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி வருகிற ஜனவரி 28ஆம் தேதி வரை பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணியை நாளை கோவை சூலூரில் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவிற்காக இரண்டு மூன்று கொடிகள் வைத்திருப்பதாகவும் இரட்டை இலை போட்ட கொடி ஒன்று,கட்டி பதிவின் போது எம்ஜிஆர் கொடுத்த கொடி ஒன்று, அண்ணா தொழிற்சங்க கொடி ஒன்று உள்ளது எனவும் ஓ பன்னீர்செல்வம் பெயரை போட்டு உத்தரவு கூறியுள்ள நிலையில் நானோ மற்றவர்களோ கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கூறவில்லை எனவும் கொடியைத்தான் பயன்படுத்துவேன் எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம் எனவும் ஆவேசமாக கூறினார். மேலும் கொடியைப் பயன்படுத்தியதற்காக சிறைக்குச் செல்லவும் தான் தயார் எனவும் அண்ணா திமுக பேனரில் தான் பூத் கமிட்டி கூட்டம் நடக்கும் என்றும் கூறிய அவர், ஓபிஎஸ் தான் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு இருக்கிறதே தவிர புகழேந்தி பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமியின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் பதிவு செய்த மனுவே தவறானது என்றும் குறிப்பிட்டதுடன், எடப்பாடி பழனிசாமி பேரம் பேசி அண்ணா திமுகவை முடித்துக் கட்ட முடிவு செய்துவிட்டார் என்ற நிலையில்தான் ஓ பன்னீர்செல்வமே நேரடியாக எல்லா இடங்களிலும் சென்று பூத் கமிட்டி அமைக்க உள்ளார் என்ற புகழேந்தி,தான் பொறுப்பேற்றது முதல் அனைத்து தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை தான் சந்தித்திருக்கிறார் எனவும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிடுகிறோம் அப்போது உண்மையான சக்தி எது என்பது தெரியும் என்றும் கூறினார்.

இதேபோல் எவன் அப்பன் வீட்டு சொத்தை கேட்கிறோம் என அமைச்சர் உதயநிதி கூறிய நிலையில் அதற்கு அவரது சிறு வயது கூட காரணமாக இருக்கலாம் என்றும் அதேவேளையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்க அப்பன் வீட்டு சொத்தா ஆத்தா வீட்டு சொத்து என்று சொல்லக்கூடாதா என்று அழகு தமிழில் பேசுவதாகவும் இருவரும் பேசினாலும் இது பொதுமக்கள் சொத்து என்றும் கூறினார். திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் அடித்துக் கொள்ளும் நிலையில் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்த போது எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது 730 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் ஏற்படுத்திருப்பதாக பேசினார்.,

ஆனால் இன்று சென்னை டி.நகர் எப்படி மிதக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். பல கோடிகளை கொள்ளை அடித்து சென்னையை நீச்சல் குளமாக மாற்றியது எடப்பாடி பழனிசாமியையே சாரும் எனவும் அந்த பழனிசாமி தற்போது 4500 கோடி ஊழல், தண்ணீர் சென்னையில் நிற்கிறது என கை காட்டும் அளவிற்கு இந்த அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் சிறைக்கு செல்கிறார்கள், கொள்ளை அடித்த பழனிசாமி கூட்டம் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், இதுதான் முதலமைச்சரின் சாதனையாக இருக்குமா என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஊழல் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அண்ணாமலையோ ஏன் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிட்டாலும் பழனிசாமி போன்ற கூட்டத்தை புகழேந்தி போன்றவர்கள் விடப் போவதில்லை எனவும் ஏற்கனவே ஒருவர் சிறைக்குச் சென்று 150 நாட்கள் ஆகிவிட்டது கண்டா வர சொல்லுங்க என்பது போல் இருக்கிறார் தற்போது அடுத்ததாக அமைச்சர் பொன்முடியும் அனுப்பியாகிவிட்டது எனவும் இன்னும் எத்தனை பேரை முதலமைச்சர் சிறைக்கு அனுப்ப இருக்கிறார்? ஆனால் நான்காண்டு கொள்ளையையும் பழனிசாமி போன்றவர்களையும் கண்டு கொள்ள மாட்டார் எனவும் விமர்சித்தார். அமைச்சர் உதயநிதியை பொள்ளாச்சி ஜெயராமன் வாய்க்கொழுப்பு என்று கூறுகிறார்.

ஏற்கனவே கமலஹாசனை பச்சோந்தி என்று கூறினாரே அது எந்த கொழுப்பு என்றும் பாலியல் தொடர்பாக இருந்தால் மட்டும் பொள்ளாச்சி ஜெயராமன் பேச வேண்டும்., இதுபோன்ற பிரச்சனைகளை பொள்ளாச்சி ஜெயராமன் பேசக்கூடாது என்றும் கிண்டலடித்தார்.மேலும் எடப்பாடி பழனிசாமியிடம் எந்த காலத்திலும் ஒட்டோ உறவோ ஒருபோதும் கிடையாது என்றும் எதற்காக பழனிசாமியை இந்த அரசு காப்பாற்றுகிறது கொடுத்தது போதும் என்று செந்தில் பாலாஜி சிறைக்கு அனுப்பி விட்டு பொன்முடி ஒன்றுமே கொடுக்க மாட்டார் என்று உள்ளே அனுப்பி விட்டார்களோ பழனிசாமி கொடுப்பதனால் தான் அட்ஜஸ்ட்மெண்டில் போகிறதோ என்பது தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.

ஒன்றிணையும் ஒன்றிணையும் என்று காலகாலமாக சசிகலா சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவரை நான் மதிக்கிறேன்., அவரை தவறாக பேச விரும்பவில்லை., இருந்தாலும் சிறையில் இருந்த போது பழனிசாமி சரியில்லை என்று நீங்கள் கொடுத்த அறிக்கையை மற்றவர்கள் மறந்திருக்கலாம் ஆனால் நான் மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். கோவையில் நிச்சயமாக ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடைபெறும் எனவும் ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருந்த மாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிய புகழேந்தி, கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் ஓபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைந்தால்தான் நன்றாக இருக்கும் அதுதான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.