இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. இது சில சமயம், அழகுக் கலையிலும் வெகுவாகப் பயன்பட்டு வருகிறது.

மருந்து என்று சொல்லும் போது, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது தான் முக்கியமான விஷயம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, ஒரு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் அது தரும் எனர்ஜியே தனி!

எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் பல அற்புதமான நன்மைகளில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

வைட்டமின் சி
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகள்
நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க
உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.

காபிக்கு குட்பை
காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காபிக்கு விரைவில் தலைமுழுகி விடலாம்.