சதுப்புநிலங்கள், காணக்கிடைக்காத அரிய பறவைகள், சுற்றிலும் அழகிய காட்சிகள் என இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான இது அதன் இயற்கை அழகால் நம்மைக் கட்டிப் போடுகிறது. வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரி, மணிப்பூரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
லோக்டாக் ஏரி உள்ளூர் மொழியில் ஃபும்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே மிதக்கும் ‘கெய்புல் லாம்ஜாவோ’ தேசியப் பூங்கா லோக்டாக் ஏரியில் இருக்கிறது. இந்த ஏரியில் பலவகை நீர் வாழ் தாவரங்கள், விலங்குகளுக்கு இயற்கை வாழ்விடமாக இருப்பதால் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை அதன் அழகில் ஈர்க்கும் தன்மை கொண்ட இந்த ஏரியானது சதுப்புநிலங்கள் சூழ கிட்டத்தட்ட சிறிய தீவுகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. மேலும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு வராமல் தவிர்ப்பதில்லை.
லோக்டாக் ஏரி மணிப்பூர் மாநிலத்தில் ஓடும் அனைத்து ஆறுகள் மற்றும் சிற்றோடைகளின் தாயகமாகும். இந்த ஏரியில் சுமார் 230 வகையான நீர் வாழ் தாவரங்கள், 100 வகையான பறவைகள் மற்றும் குரைக்கும் மான், சாம்பார் மற்றும் இந்திய மலைப்பாம்பு போன்ற 425 வகையான விலங்கினங்கள் உள்ளன.
அதிகாலை, படகு சவாரியில் ஏரியின் மொத்த அழகையும் ரசிக்கலாம். நாட்டில் வேறு எங்கும் இல்லாத அழகின் கலவையாக லோக்டாக் ஏரி விளங்குகிறது. அழகிய நீர், படகுப் பாதைகள், சுற்றுப் புற பசுமைகள் மற்றும் செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமனம் என, இயற்கையுடன் கலந்து நம் வாழ்வினை மெய்மறந்து நம்மை மயக்கும் இடமாக லோக்டாக் ஏரி இருக்கிறது.
இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கும் நாம் விடுமுறையை கழிக்க ஒரு முறையேனும் லோக்டாக் ஏரிக்கு செல்ல வேண்டும்.