‘மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே.., போதைப்பொருள் புழக்கம்’ -எம்.பி.கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எம்.பி. கனிமொழி கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும். கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருக்கும் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் உருவாக வேண்டும், பா.ஜ.க. மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில் போட்டியிடும் 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு தெரியாது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் எப்படி தி.மு.க. பெயரளவில் திட்டங்களை சொல்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்? என்றவரிடம்.,

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,‘போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது.குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டார்.

இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்., ‘60 வாங்கலாம் 90 சதவீதம் கூட வாங்கலாம் 100 சதவீதம் எனக் கனவு காண்பது அவரது உரிமை ஆனால் வெற்றி பெறுவது நிச்சயமாக நாங்கள்தான். ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார் பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள்’ என்று பேசினார்.