சீரழியும் மாணவர்களின் எதிர்காலம் -எஸ்.பி.வேலுமணி

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனைகளைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மனித சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய போதைப்பொருள் அதிகரித்து வருகிறது, தி.மு.க .நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு 2000 கோடிக்கு மேல் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு துளி கூட போதைப் பொருள் இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் வாயிலாக தி.மு.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சீரழிந்து கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டும், இந்த அரசு விழித்துக் கொண்டு போதைப் பொருளைத் தடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.