ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்  – பாஜக விவசாயி அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி தென்னை விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்ட விவசாயி அணி தலைவர் வசந்த சேனன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டு கைகளில் தேங்காய்களை ஏந்திய படி  மாநில அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.