அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தொகுதி பிரச்னைக்காகவே சந்தித்தனர்! -வானதி சீனிவாசன்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை பாஜக-வினர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

அதன்பின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் “நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்காளர்களுக்கு 3,749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின்  வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்த அவர்,

தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அவரது கோரிக்கை கேட்கபட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான  பொள்ளாச்சி ஜெயராமன் , அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தொகுதி பிரச்சினைகளுக்காக மட்டுமே  நிதியமைச்சரை  சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றார். மேலும், கோவையில் சிட்பி வங்கியின் புதிய கிளை கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளிடம் விசாரித்தார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை எனவும் , கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம், காலையிலிருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதைக் கவனிக்கவில்லை எனக் கூறினார்.

மேலும் கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்ததாகவும், அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை, தனிப்பட்ட நிகழ்வுகளும் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அவரிடம் கூட்டணி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது, அதற்குப் பதிலளித்துப் பேசிய வானதி சீனிவாசன், ” கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும், நேற்று சென்னையில் கோட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என்றும் மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் எனத் தெரிவித்தார்.