ஸ்ரீ ராமகிருஷ்ணா  கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறையுடன், மலேசியா இன்டி சர்வதேசப் பல்கலைக்கழகம் (ஐ.என்.டி.ஐ.) இணைந்து, “சர்வதேச அளவிலான இரண்டு  நாள் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தியது.

உயிரி தொழில்நுட்பங்களின் அணுகுமுறையில் உணவு, விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார் அறிவியலில் நீடித்த நிலையான உயிர்வளங்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். உயிரிதொழில்நுட்பத் துறைத் தலைவர் சுபாஷ்குமார் வரவேற்புரை அளித்தார்.

இதில் மலேசியா இன்டி சர்வதேசப் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் வாங்லிங்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஆய்வுக்கோவை வெளியிட்டார்.

மேலும், புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை திட்ட அலுவலர் பிலால் அஹமது, மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மைய வாழ்வு அறிவியல் விஞ்ஞானி கதிர்வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அதையடுத்து, “நிலையான மேம்பாட்டில் உயிர்வளங்கள் மேலாண்மை”, “கோவிட்-19 பின்னர் உலக மக்கள் தொகைப் பெருக்கம், டி.என்.ஏ. தொழில்நுட்பத்தில் விவசாயம், மருத்துவத் துறைகள் வளர்ச்சி நிலைகள்”, “நுண்ணுயிரி தொழில்நுட்பவியல்”, “ஆரோக்கியம் சார் அறிவியல்” உள்ளிட்ட தலைப்புகளின் அமர்வுகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.