கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி “திரைத்துறை உலகத்தின் பார்வையில் கலைஞர்” என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்த் முரசொலி நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல், இலக்கியம், எழுத்து, திரைப்பயணம், வசனம் போன்ற ஏராளமான துறைகளில் கலைஞரின் பங்களிப்பு குறித்து பிரபலங்கள் எழுதிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கட்டுரையான “திரைத்துறை உலகத்தின் பார்வையில் கலைஞர்” முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் முரசொலியில் கூறியிருப்பதாவது: 977 ஆம் ஆண்டு நான் மியூசிக் அகாடமி அருகில் சென்றுகொண்டிருந்த போது எனக்குப் பின்னால் ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அதில் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கலைஞர் உட்கார்ந்திருந்தார். உடனே நான் ஒதுங்கி வழி விட்டேன். அப்போது அவர் என்னைத் தாண்டிக் கடக்கும் போது அன்பு நிறைந்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுவே நான் கலைஞரை முதல் முதலில் சந்தித்தது., என நெகிழ்ச்சியுடன் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரும் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர். 1980 ஆம் ஆண்டு நான் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படத்தில் கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார். அப்போது எளிமையான தமிழைப் பேசவே நான் சிரமப்படுகிறேன். உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. என்னை தவறாக நினைக்க வேண்டாம்” என்றேன். இருப்பினும் அவர் வசனங்களைப் பேசி நடித்திருக்கலாமோ, தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருக்கிறது., என்றார்.