கோவையில் 500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியுடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து 500 ஆட்டோ  நூலகங்களை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார். மக்கள் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டம் மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வகையில் 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டிகளையும் வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பயன் பெரும் வகையில் இந்த திட்டம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

நிகழ்வில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்  கலந்து கொண்டனர்.