15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட அரச மரங்கள் மறு நடவு

கோவை வேலாண்டிபாளையத்தில் 15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட இரண்டு அரச மரங்கள் மறு நடவு செய்யப்பட்டது. கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டபட இருந்த 25 மரங்களை செயல் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் கடந்த மூன்று’ மாதங்களில் வேறுடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது.

இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது.இந்நிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச மரத்தின் கிளைகள் நறுக்கப்பட்டு 15 அடி உயரம் உள்ள 15 டன் எடை கொண்ட அரச மரத்தையும், ஏழு டன் எடை கொண்ட அரச மரத்தையும் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு மிகுந்த கவனத்துடன் எடுத்து சென்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.