வழக்கறிஞர் ஏமாற்றியதால் பெண்மணி தற்கொலை முயற்சி

கோவை ஆர்.எஸ் புரத்தை சார்ந்த இந்திராணி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தமிழரசன் வீடு கட்டியதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதால் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திராணி சில வருடங்களுக்கு முன்பு சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டி தருவதாக மேஸ்திரி சித்திரைநாதன் ஏமாற்றியதாக இந்திராணிக்கும் மேஸ்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண தமிழரசன் என்ற வழக்கறிஞரை இந்திராணி நாடியுள்ளார். தமிழரசன் அதற்கு தீர்வு கண்டு தருவதாக கூறியுள்ளார். சித்திரைநாதனுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை இந்திராணியிடம் தமிழரசன் பெற்றுக் கொண்டு, பணத்தை சித்திரைநாதனிடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் வழக்கறிஞர் தமிழரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும், அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூபாய் 8 லட்சத்தி 70,000 பணத்தை பெற்றுக் கொண்டு கட்டிடத்தின் பேஸ் மட்டத்தை மட்டும் கட்டிவிட்டு இந்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்டுமான பணி நடைபெரும் என்று கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து இந்திராணி கேட்டதற்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார். விசாரணை நடத்திய தலைவர் மீதித் தொகையை திருப்பி வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இந்திராணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெனையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.