சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளிகள்: தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக  சைமா கருத்து

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை  துன்புறுத்துவதாகவும், தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் தங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து செல்ல துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவையில் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சைமா) தலைவர் ரவிசாம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். பஞ்சாலை தொழிற்சாலைகளில் 60% வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதனால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்சாலைகளில் அனைத்து விதமான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக தெரிவித்த அவர்கள், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என ஹிந்தி மொழியில் பேசி வட மாநிலத்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் வட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படுவதால் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள  தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லவார்கள் என தெரிவித்தனர்.

Photos by: Sathis Babu.Ponraj