மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மன நல தினமாக கொண்டாடப்படுகின்றது. இதன் நோக்கம் மன நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழிகளில் ஆதரவு அளிப்பதும் ஆகும். உலக மன நல தினத்தையொட்டி பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும் மனநல மருத்துவ மையத்தின் மனநல மருத்துவர் மணி மனநல பாதிப்பு குறித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது, “2023 ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருள் மனநலம் ஒரு உலகளாவிய மனித உரிமை மனநலம் என்பது அனைவருக்குமான மனித உரிமை என்பதாகும். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதோ ஒரு மன நல பாதிப்பில் அவதிப்படுகின்றார்கள். இதில் பதற்றம், மிகை அச்சம் மற்றும் மனச்சோர்வு மிகவும் பொதுவான மனநல பாதிப்புகள் ஆகும்.

இந்தியாவை பொறுத்தவரை சுமார் 15 கோடிக்கு அதிகமான மக்கள் ஏதாவது ஒரு மனநல பாதிப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனநல பாதிப்புகளுக்கு மரபியல், உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இளம் வயதினர், மற்றும் நடுத்தர வயதினர் நன்றாக உழைத்து. வருமானம் ஈட்டி. பொருள் சம்பாதித்து, பிற்காலத்திற்கும்  பொருள் சேர்த்து, தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சந்தோசமாக வைக்கும் காலகட்டத்தில் தீவிர மன நல பாதிப்புகள் வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பமே தொடர் வேதனைக்கும், பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாகி நிம்மதி இழக்கின்றது. இதனால் குடும்பமும் சமூகமும் பாதிக்கப்படுகிறது.

கடந்த 20 வருடமாக மன நல மருத்துவத்தில் மவுன புரட்சி காரணமாக மன நல பாதிப்புகள் குணப்படுத்த கூடியதாகவும், சிகிச்சை அளிக்க கூடியதாகவும், ஓரளவிற்கு தடுக்க கூடியதாகவும், உள்ளது. ஆரம்ப காலத்திலே கண்டுபிடித்து சிகிச்சை செய்தால் மட்டும் தான் இதற்கு சாத்தியம். இந்த பாதிப்புகள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புக்கு காரணம் செய்வினை பேய், பிசாசு, பில்லி சூனியம் என்ற மூடநம்பிக்கைக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு கிடைப்பது இல்லை.

மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசர்கள், மனநல சமூக பணியாளர்கள் பங்கு மட்டுமில்லாமல், மன நல தன்னார்வ அமைப்புகள், பத்திரிகைகள். ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியவற்றின் தீவிர முயற்சியாலும்  தற்போது அரசின் மன நல முகாம்களிலும் விழிப்புணர்வு நன்றாக உள்ளது. தற்போது மனநல பாதுகாப்பு சட்டம் 2017 அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டவருக்கும். குடும்பத்திற்கும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

மருந்துவ சிகிச்சை. உளவியல் ஆலோசனை நடத்தை மாற்று சிகிச்சை, மறுவாழ்வு பயிற்சி, குழு சிகிச்சை, மின் அதிர்வு சிகிச்சை, ஆழ்நிலை உரக்க வைத்தியம் குடும்ப ஆலோசனை என்று சிகிச்சை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. மனநலம் என்பது உடல்நலம் போன்று முக்கியமானது மன நல பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மன நல பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கலாம்.

மனநலம் பாதிக்காமல் தடுக்க போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, தவறாமல் உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைக்க பயிற்சிகள் போன்றவை அவசியமானது. மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு பல்வேறு வளங்களில் தீர்வுகள் உள்ளன. அவர்களுக்கு உதவுவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்றார்.