ஒவ்வொருவரின் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராமசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

விழாவிற்கு கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் திரு க. முருகையா, துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் இரவி, தேர்வாணையர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

புதுதில்லி சி.எஸ்.ஐ.ஆர்.அமைப்பின் இயக்குநரும், டி.எஸ்.ஐ.ஆர்.அமைப்பின் செயலாளருமாகிய கலைச்செல்வி பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.


அவர் பேசுகையில், ஒவ்வொரு தனி மாணவனின் கல்வியும், சமுதாயத்தை ஈடேற்றவேண்டும்; இளைஞர்கள் அனைவரும் கற்ற கல்வியின் பயனாக நாட்டின் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் . நாம் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிந்தாலும் இந்தியாவின் மரபுசார் அறிவின் அடையாளம் என்பதை உலகுக்குச் சொல்ல அயராது உழைக்க வேண்டும். அத்தகைய உன்னத உழைப்பின் அடையாளமாகவே சந்திராயன் திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடுகிறோம்.ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்கிற நோக்கில், அயராத உழைப்பால் நாட்டை உயர்த்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.


இவ்விழாவில் 2594 மாணவர்கள் பட்டம்பெற்றதோடு 46 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வாளர்கள் 18 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.