விஸ்வரூபம் எடுத்த விவகாரம்…விசாரணை வளையத்தில் பள்ளி அதிகாரிகள்

கோவையில் பிரதமர் கலந்துகொண்ட வாகன பேரணி நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உதிரவிட்டுள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் வாகன பேரணி மாணவர்கள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். அதில் , தேர்தல் பிரச்சாரம் போன்ற செயல்பாடுகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாகத் தெரிய வந்துள்ளதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மீது கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா, அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மாணவிகள் ஆசிரியர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொண்டார்.