இனி வரும் மாதங்கள் சுவாரசியமாக இருக்கும்! – தமிழக ஆளுநா் ஆா். என். ரவி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநா் ஆா். என். ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரங்கத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அவா்தம் உரையில், “உலகத்தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாகக் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியை முனைவா் மா. ஆறுச்சாமி இளைய தலைமுறைக்காக உருவாக்கியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தக் கல்லூரி தனக்கான ஓா் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பும் உள்ளார்ந்த அா்ப்பணிப்புமே இதன் வளா்ச்சிக்குக் காரணம் என்றும் கற்பித்தல் திறனிலும் ஆராய்ச்சி நுட்பத்திலும் சிறந்து விளங்கும் இக்கல்லூரி பொன்விழாவுடன் பவளவிழா, வைரவிழா ஆகியவற்றையும் கொண்டாட வேண்டும் என்றும் வாழ்த்தினார். ஒரு காலத்தில் நம் நாட்டை உலகநாடுகள் அவ்வளவாகப் போற்றவில்லை ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது, இந்தியாவின் கடவுச்சீட்டை இன்று உலகமே மதிக்கிறது என்று குறிப்பிட்டு பேசினார்.

மேலும், மிக விரைவில் பாரதம் உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடாக மாறவுள்ளது என்றும் நம் பண்பாட்டையும் பழமையையும் திறமையையும் பல நாடுகள் போற்றுகின்றன என்றும் கூறினார். அத்துடன் மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்ரா திட்டம் 23 லட்சம் கோடி தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பெண்கள் வீட்டில் உரிமையாளராக மாறியுள்ளனர்.

இத்திட்டங்களால் மகளிர் தொழில்முனைவோர்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் துணைசெய்கின்றனா். இன்று நாட்டில் பெண்கள் நிலவுக்கும், சூரியனுக்கும் விண்கலத்தை செலுத்தி வருகின்றனர். இளைய தலைமுறையான மாணாக்கர்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும் திட்டமிடுதலும் தேவை என்றும் புதிய பாரதத்தை உருவாக்குவதில் மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. அடுத்த சில மாதங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது. முதல் முறை வாக்களிக்கும் உங்களில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கவில்லை என்றால் விரைந்து வாங்கிக் கொள்ளுங்கள். மாணவர்களிடம் 100 சதவீத வாக்குகளை எதிர்பார்க்கிறேன் என்று பேசினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். முன்னதாக, கல்லூரி மேலாண்மைக் குழுவின் தலைவா் சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். விழாவின் நிறைவில் கல்லூரியின் பொருளாளா் மருத்துவா் பரமசிவன் நன்றி கூறினார்.