ஆண்டுதோறும் ஒடிசாவில் உள்ள சந்திரபாகா கடற்கரை பகுதியில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா நடைபெறுவது வழக்கம். இது மணல் கலைஞரின் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 5 வரை பூரியில் உள்ள கொனார்க்கில் நடத்தப்படும் ஒரு புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வாகும்.
இந்நிகழ்வானது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மணல் கலைஞர்களை ஈர்க்கிறது. இதில் பங்கேற்கும் சிற்பிகள் முழுக்க முழுக்க கடற்கரை மணல்களால் மட்டுமே கலைகளை வடிவமைக்கின்றனர். கலாச்சார பாரம்பரியம், சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருப்பொருட்களைக் கொண்டு உலகளாவிய விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
அதன் நோக்கில், கடற்கரை மணலை பயன்படுத்தி, இதில் பங்கேற்கும் கலைஞர்கள் புதுவிதமான வடிவமைப்புகளையும், சிற்பங்களையும் உருவாக்குகிறார்கள். அவை பெரும்பாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பயனுள்ள செய்திகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைகிறது.
நோக்கம்:
இந்த விழாவின் முக்கிய நோக்கமாகச் சுற்றுலாவை மேம்படுத்துதல், மணல் சிற்பத்தின் வளமான கலைத்திறனை வெளிப்படுத்துதல், மற்றும் கலைஞரின் புதிய யோசனைகள் மற்றும் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை அமைகிறது.
இந்நிலையில் விழாவின் 2023 பதிப்பில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த விழா சர்வதேச மணல் சிற்பிகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தி அதனை கொண்டாட உதவுகிறது.