நவீன முன்னேற்றங்களை அறிந்துகொள்வது அவசியம் – டாக்டர் நல்ல ஜி பழனிசாமி

கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக முதன்முறையாக அன்னூர் வட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக‘மெடி அப்டேட்’ கருத்தரங்கு நடைபெற்றது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்திய கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, ‘கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அவர்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில், ‘மருத்துவத் துறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நோயாளிகளுக்குத் தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவர்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது என்றும் இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவர்கள் தங்கள் தொழில் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு சக மருத்துவர்களுடன் கலந்துரையாடவும் நல்வாய்ப்பாக அமைகின்றன’ எனக் கூறினார்.

முன்னதாக, கே.எம்.சி.ஹெச் மருத்துவ இயக்குநரும், எலும்பு முறிவு ஆலோசகர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விமல்குமார் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மெடி அப்டேட் 2024 கருத்தரங்கில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.