அதிக உடல் செயல்பாட்டிற்கு பிறகு நம் உடலானது எளிதில் சோர்வடைந்து விடும். அதே போல், நீண்ட நாள் மன அழுத்தம் நம் மனதை சோர்வடைய செய்கிறது. அத்தகைய மனச் செயல்பாடுகளானது ஓய்வின்றி தொடர்கிறது என்றால் அது ஒருவரின் மன அமைதியும், நல்லறிவையும் பறித்துவிடுகிறது. அதனை தடுப்பதற்கான தீர்வு பற்றி இங்கே காண்போம்!
அதிக பொறுப்புகள், வேலை சுமை மற்றும் சுற்றத்தார்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் ஏற்படும் நாள்பட்ட உணர்ச்சி குறைபாடே மனக் கவலையை ஏற்படுத்துகிறது. அந்நிலையில் ஒருவர் நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு, முதலில் மன சோர்வின் அறிகுறிகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதன் அடிப்படை காரணங்களைப் புரிந்து, அதைத் தவிர்ப்பதற்கான பயனுள்ள செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
மன சோர்வுக்கான அறிகுறிகள் ?
பொதுவாக ஒரு மனிதன் மனரீதியாக சோர்வடைந்ததை அவர்களின் உடலில் காணமுடிகின்றன. அத்தகைய மனசோர்விற்கான சில அறிகுறிகளை இங்கே அறிந்து கொள்வோம் !
நீங்காத சோர்வு:
போதுமான ஓய்வு பெற்ற போதிலும் தொடர்ந்து சோர்வாக உணர்வது, ஒருவரின் ஆற்றலை குறைக்க வழிவகுக்கிறது. கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் சோர்வாகவும், ஆற்றல் குறைவாகவும் உணர தொடங்குவது மன சோர்வின் அறிகுறியாகும்.
செயல்திறன் குறைவு:
மன சோர்வு ஏற்பட்டால் வாழ்க்கையின் தனிப்பட்ட உறவுகள் முதல் தொழில்துறையில் பின்தங்குவது வரை அனைத்திலும் செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் குறைந்து பாதிக்கத் தொடங்குகிறது.
உணர்ச்சிப் பற்றின்மை:
மனரீதியாக சோர்வடைந்த ஒருவர் உணர்ச்சிவசப்படாமல் சமூக தொடர்புகளில் இருந்து விலகியதாகவும், நெருங்கியவர்களிடமிருந்து பிரிந்த உணர்வை அனுபவிப்பவர்களாகவும் திகழ்வர். மேலும், ஒருமுறை அனுபவித்த செயல்களில் ஆர்வத்தை முற்றிலும் இழப்பவர்களாகவும் இருப்பர்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்தல்:
மனதளவில் சோர்வாக உணரும் ஒருவர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் உரையாடும்போது அவர்களுக்கு பதிலளிக்காமல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வர்.
உடல் அறிகுறிகள்:
மனரீதியாக சோர்வடைந்த ஒருவருக்கு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் தலைவலி, தசை பதற்றம், இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் நோய்கள் போன்ற அறிகுறிகள் உடலில் ஏற்படும். மேலும், நினைவாற்றல் குறைந்து, சில செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் சிரமம் அடைவதும் மன சோர்விற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
மனசோர்விற்கான தீர்வுகள்:
ஒருவரது மனம் சீராகச் செயல்பட்டால் மட்டுமே ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்க முடியும். அவ்வகையில் மனச் சோர்வைப் போக்குவதற்கான சில தீர்வுகளை இங்கே காணலாம்!
ஆழ்ந்த மூச்சு பயிற்சி:
மனச் சோர்வடைந்த ஒருவர் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளைப் (deep breath) பயிற்சி செய்ய வேண்டும். அதாவது 4 நொடிகள் மூச்சை உள்ளிழுத்து, 7 நொடிகள் வைத்திருக்க வேண்டும், பின்பு 8 நொடிகளுக்கு மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் ஒருவரின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நிதானமாக செயல்பட உதவுகிறது.
இயற்கையான சூழல்:
மரங்கள், செடிகள் சூழ்ந்த இடத்தில் நடந்து சென்று இயற்கையான சூழலை அனுபவிக்க வேண்டும். இயற்கையுடன் நேரத்தை செலவிட்டு அங்கு பெறும் புதிய காற்றைப் சுவாசிப்பதால் மனதிற்கு புத்துயிர் அளித்து மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சமூக தொடர்பு:
மன சோர்வுடைய ஒருவர் தங்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளை நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் மனதிற்கு மிகுந்த ஆதரவையும் நிம்மதியையும் அளிக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான உணவு:
பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் நிறைந்த சத்தான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், மன அழுத்தத்தை அதிகரிக்க தூண்டும் அதிகப்படியான காஃபின் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
“இல்லை” சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்!
உங்களுக்கான எல்லைகளை அமைத்து உங்களின் சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க பழகுங்கள். உங்களைத் தாழ்த்துவதற்காக உருவாகும் கட்டுப்பாடுகள் அல்லது கோரிக்கைகளுக்கு வேண்டாம் என்று சொல்வதில் பரவாயில்லை!
மருத்துவர் ஆலோசனை:
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திறமையான ஆலோசகரின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால், உங்களை புரிந்து கொண்டு உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவை வழங்கும் திறன் அவர்களிடம் உள்ளது.
எனவே, மனநலமின்மை என்பதைப் பலவீனமாகக் கருதாமல், அதை உணர்ந்து அதற்கான தீர்வை அடையும் வழிகளைப் பலமாகக் கருத கற்றுக்கொள்ளுங்கள். மேலும், ஒவ்வொருவரும் உங்களின் உடல்நலத்தை பேனி பாதுகாப்பது போல மனநலத்திலும் கவனம் செலுத்த மறந்து விடாதீர்கள்.