ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின்  முன்னாள் மாணவர் சங்கம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முன்னாள் மாணவர் சங்கம் துபாயில் சனிக்கிழமை துவக்கப்பட்டது.  இந்நிகழ்வில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி சங்கத்தைத் துவக்கி வைத்து, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

இதில், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும், துபாயில் பணியாற்றி வரும் சமையல் கலை நிபுணருமான ஆனந்த் ராமகிருஷ்ணன் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவிய, அவரது சேவையைப் பாராட்டி, லட்சுமிநாராயணசுவாமி விருது வழங்கி சிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சார்ந்த 150 – க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டு, துபாய்க்கு வரும் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்தும் பேசினர். மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர் சங்க துபாய் கிளை சார்பில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.