பெண்களின் பாதுகாப்பு கருதி க்யூஆர் கோடு அறிமுகம் !

கோவை மாநகர காவல்துறையினர்  தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும், க்யூஆர் கோடு மூலம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

டிஜிட்டல் கையெழுத்து இயக்கம்

 கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,  துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,கோவை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக பார்க் இன்ஸ்டிடியூஷன் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து டிஜிட்டல் கையெழுத்து இயக்கம்  துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இது குறித்து உறுதிமொழி எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், பங்கேற்பவர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

க்யூஆர் கோடு அறிமுகம்

கோவை மாநகரில் இரவு நேரங்களில் பணிகளுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என கூறிய அவர் இதனை மேலும் அதிகப்படுத்துவதற்குப் பெண்களின் கருத்துக்களைக் கேட்டறிய டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தக் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அதில் கருத்துக்கள் தெரிவித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

“போலிஸ் அக்கா”  திட்டம்

“போலிஸ் அக்கா” என்ற திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். பள்ளிகளுக்குச் சென்று போலீசார் பாலியல் குற்றங்கள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் ஒரு சில தனியார் பள்ளிகள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி காவலர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை என புகார்கள் வந்துள்ளதாகக் கூறினார். எனவே பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்  காவலர்கள் வரும்பொழுது ஒத்துழைப்பு தருமாறு  அறிவுறுத்தினார்.