தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.