சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஒத்திகை

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள அரசு சார்பில் மாவட்டங்களில் தோறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் உட்பட பல்வேறு செயல்களில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதன்படி கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார். அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்பினரும் கலந்து கொள்வர்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளி மற்றும் பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி நேரில் பார்வையிட்டார்.