கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

கோவை கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான தேர் வடம்பிடித்தல் நிகழ்வு நாளை (மார்ச் 1) பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறுகிறது. தேர் நிலையில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளை கடந்து மீண்டும் திருத்தேர் தோ்நிலையை அடைகிறது

தேர்திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜவிதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக்நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக்நகர் ரவுண்டானா, சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

மருதமலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, மருதமலை, தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னய்ய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும்,பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம்.

சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து, தியாகி குமரன் வீதி வழியாக, ராஜ வீதிக்கு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், 1ம் தேதி தேதி காலை 8:00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது.

தேர் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.,விதி ஆகிய சாலைகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

தேர் திருவிழாவிற்கு, இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள், ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தையும், நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும், மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் வாகனங்களை நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Source: Dinamalar