கோவையில் ஆமை வேகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி நடைபெறுகிறது – வானதி சீனிவாசன்

கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது: இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்கு கருவிகள் அமைத்து அரசின் சார்பில் பராமரிப்பது குறைவாக உள்ளது.

கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளது. அதிகமாக மக்கள் பயன்படுத்தும் சலிவன் வீதி, செட்டி வீதிகள் கூட மோசமாக உள்ளது.

இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகள் மோசமாக உள்ளது. மழைக்குப் பின்பு அந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு உள்ளாக பா.ஜ.க மாவட்ட தலைவர் போராட்டம் அறிவிக்க உள்ளார்.

குடிநீர் பிரச்சினைகள், சாக்கடை, சாலை என பல பிரச்சினைகள் உள்ளது. அரசாங்கம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக திமுக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை.

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக தி.மு.க இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சி தி.மு.க. புதியவர்களுக்கு திறமைசாலிகளுக்கு தி.மு.க வாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு குடும்ப அரசியல் பாதகமானது, சாதகமாகாது. பா.ஜ.க இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது.

அண்ணாமலையின் வாட்ச், சட்டை, பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்ற கேள்வி. மக்கள் பிரச்சினை ஆயிரம் உள்ளது என பதில் அளித்தார்.

அன்னூர் விவசாயி பிரச்சனையில் மாநில தலைவர் போராட்டம் நடத்தினார். விவசாயிகள் பிரச்சனைக்கு பா.ஜ.க குரல் கொடுக்கும். விவசாயிகளின் நிலத்தை பறிப்பது தவறு. பா.ஜ.க பின்னால் இருந்து எந்த அரசியலும் செய்யவில்லை. அன்னூர் விவகாரத்தில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் உட்கார்ந்து பேச வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஏழு குளங்களை மையப்படுத்தியது. ஆமை வேகத்தில் பணி நடைபெறுகிறது. கோவை குளங்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என தெரிவித்தார்.