போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகரிப்பு – ரத்து செய்யக்கோரி வழக்கு

தமிகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக கடந்த அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட அபராத உயர்வு அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக்கூறி இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திரக் கோளாறு, கவனக்குறைவுடன் வாகனத்தை இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அபராத தொகையை அதிகரிப்பதன் மூலம் அதனை அமல்படுத்தும் காவல் துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவார்கள். அபராத தொகையை உயர்த்தும் முன் அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. .

இந்த மனு சென்னை நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.