கோவையிலிருந்து சொந்த ஊர் செல்ல தயாராகும் 3 லட்சம் தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள்.

தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்பி வர ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் இருப்பு வைக்கும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கோவையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்ல தயாராகி உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர்.

சில தொழில் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களுக்காக பஸ்களை ஏற்பாடு செய்து தர திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகளவு விடுமுறை எடுக்க இருப்பதால் சில தொழில் நிறுவனங்கள் தீபாவளிக்கு பின்னர் தொழிலாளர்கள் வரும் வரை நிறுவனங்களை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கோவை தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கின்றனர். அவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றால் ஒரு வாரம் இல்லது 2 வாரம் கடந்த பின்னர் தான் திரும்புவார்கள்.

சிலர் பண்டிகை பின்னர் திரும்ப வருவதில்லை. வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் வேறு தொழிலாளர்களை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர், தொழிலாளர்களின் வருகையை பொருத்து நிலைமை மாறும்.

கோவை மாவட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, கோவைக்கு தொழிலாளர்கள் பலர் விருப்பத்துடன் வந்து வேலை செய்கிறார்கள்.

தீபாவளிக்கு பின்னர் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது சொந்த ஊர் செல்ல 3 லட்சம் பேர் தயாராகி வருகின்றனர்.

இவர்கள் திரும்பும் போது அவரது நண்பர்கள், உறவினர்களையும் வேலைக்கு அழைத்து வருவார்கள். தொழிலாளர் வருகை 5 லட்சமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.