ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் விழிப்புணர்வு: வாழ்வியல் முறை மாற்றமே மார்பகப் புற்றுநோய்க்கு காரணம்

– டாக்டர் குகன்

மார்பகப் புற்றுநோய் ஏற்பட மரபுவழி பாதிப்பை விட, நம்முடைய வாழ்வியல் முறையில் மாற்றம், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வின்மை போன்றதான் காரணமாக உள்ளன என டாக்டர் குகன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, மார்பகப் புற்றுநோய் மாதத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவ இயக்குநர் டாக்டர்
குகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது: அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவது என்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. இதைக் கண்டறிய அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு குறித்து, பெண்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவிகளாகிய நீங்கள் இதன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரபுவழி பாதிப்பு என்பதை விட, நம்முடைய வாழ்வியல் முறையில் மாற்றம், உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வின்மை போன்றவையெல்லாம் மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணமாகின்றன என்றார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்கவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும்போது: மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியமாகும். இது குறித்த போதிய அறிவு எல்லோரும் பெற்றிருக்க வேண்டும். இளம் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் அவ்வப்போது பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்து விட முடியும். நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எளிமையான முறையில் குணப்படுத்த முடியும். இந்நோய் குணப்படுத்தக்கூடியதே என்றாலும், வருமுன் காப்பதே சிறந்தது என்றார்.

இதையொட்டி இக்கல்லூரி மாணவிகள் 250 பேருக்கு, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒலி, ஒளி அடங்கிய “பென்டிரைவ்” வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன், பெண்கள் மேம்பாட்டு மையத் தலைவர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.