மூளைச்சாவடைந்த செக்யூரிட்டியால் 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவடைந்த 52 வயது செக்யூரிட்டியால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சின்னபுளியம் பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி வயது 52. மனைவி நிர்மலாதேவி, மகன் கனகவேலன், மகள் காயத்திரி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர் கடந்த ஜூலை 28 ஆம் தேதி காலை 9.40 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது வேப்பம்பாளையம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி நிர்மலாதேவி, மகன் கனகவேலன், மகள் காயத்திரி ஆகியோர் மூர்த்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது நுரையீரல், சிறுநீரகம், இருதய வால்வ், கண்கள், கல்லீரல், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் மற்றும் இருதய வால்வ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய மூர்த்தி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.