முதல் சுற்றிலே இந்திய அணிகள் அசத்தலான வெற்றி

தமிழக வீரர் சசிகிரண்

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.

சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஓபன் பிரிவுக்கான முதல் சுற்றில், இந்திய “ஏ” அணி, ஜிம்பாப்வே அணியையும், “பி” அணி ஐக்கிய அரபு அமீரக அணியையும், “சி” அணி தெற்கு சூடானையும் தோற்கடித்தன.

மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி அடைந்தன. மகளிர் “ஏ” அணி தஜிகிஸ்தானையும், “பி” அணி வேல்ஸையும், “சி” அணி ஹாங்காங்கையும் தோற்கடித்தன.

இதுகுறித்து இந்திய அணியில் உள்ள தமிழக வீரர் சசிகிரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின்போது சூழலுக்கு தகுந்தவாறு காய்களை நகர்த்தி வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து வெற்றிபெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.