சச்சினின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்

வாழ்க்கையில் இதுவரை இரண்டு விஷயங்கள் நடக்காததற்கு இப்போதும் வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலகளவில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சச்சின் டெண்டுல்கர். இன்றளவும் கிரிக்கெட் உலகில் அவரின் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆனாலும் அவருக்கும் வாழ்க்கையில் இரண்டு விஷயம் நடக்காததற்கு வருத்தத்தில் இருக்கிறார்.

இது குறித்து கிரிக்கெட்.காம் இணையதளத்துக்கு பேசிய அவர் “எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு. இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர் தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆடவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு” என்றார்.

மேலும் பேசிய அவர் “எனக்குள் இருக்கும் இன்னொரு வருத்தம் என்னவென்றால் எனது சிறுவயது நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தான். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்னும் உண்டு” என்றார் சச்சின் டெண்டுல்கர்.