அரசு சுகாதார மையங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு !

கோவையில் உள்ள அரசு சுகாதார மையங்களில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னாள் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தற்பொழுது மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். குறிப்பாக தற்பொழுது கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதால், இப்பகுதியில் நோயால் தாக்கப்பட்டவர்கள் குறித்தான தகவல்களையும், அவர்களுக்கான சிகிச்சைகளையும் விசாரித்தார். அதனைதொடர்ந்து தினமும் இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் விசாரித்தார்.

கர்பிணிகள், தாய்மார்களை நோய்தொற்று பாதிக்காமல் எவ்வாறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது? இப்பகுதியில் எத்தனை தாய்மார்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்? என்பது குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மற்றும் மருத்துவமனை, ஊழியர்களுக்கும் அமைச்சர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.