டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது                              மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது எனத் தெரிவித்தார். நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாகவும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்  நாளைய தினம் ஒரு முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டுக் கால கனவு, எண்ணம், தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற விழாவைக் கொண்டாடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர்,  இதில் திமுகவினர் இன்னும் பிற்போக்குத் தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார். பிரதமர் வருகையால், தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும் அதற்கான நேரம் வந்துவிட்டது எனச் சாடினார். கோவையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டுள்ளது குறித்தான கேள்விக்கு அதைப்பற்றி பிறகு விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துச் சென்றார்.