டிரினிட்டி கண் மருத்துவமனையின்  போக்குவரத்து காவலர்களுக்கான இலவச முகாம்!

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை ஆகியோர்  இணைந்து மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை வியாழக்கிழமை முதல் நடத்தி வருகின்றன.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு நடைபெறும் இம்முகாமைக் கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில்  இலவச கண் பரிசோதனை, கண் கண்ணாடிகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த முகாமினை டிரினிட்டி கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு, டிரினிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனில் ஸ்ரீதர் ஆகியோர்  துவக்கிவைத்தார்.

 

இதில் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனில் ஸ்ரீதர்  பேசுகையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவக்கப்பட்ட எங்களது மருத்துவமனை கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்வை இழப்பைத் தடுப்பது, கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முதலியன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். பிறக்கும் போதே சிலர் கண் பார்வை இல்லாமல் பிறக்கின்றனர். பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் பார்வை குறைபாடு ஏற்படுவதும் உண்டு. உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண்பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர்.

மேலும், விசன் 2020 திட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள, கண்புரை, கண்ணிமை உட்புற டிராகோமா, கண்ணில் நீர் வழிதல், குழந்தைகளில் பார்வைக் குறைபாடு, மங்கலான பார்வை, சர்க்கரை நோயால் விழித்திரைப் பாதிப்பு, கண் நீர் அழுத்த நோய் முதலிய ஏழு நோய்களால் எவரும் பார்வை இழக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் கண்டறிந்து, பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்தார்.

இதையடுத்து, கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு பேசியதாவது :- போக்குவரத்து காவலர்கள் வெயில், மழை மற்றும் தூசு அதிகம் உள்ள பகுதியில் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்., என்றார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை மற்றும்  மும்தாஜ், அனுஷா மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் செய்தனர்.