நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
தொடர்ந்து நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவ,மாணவிகள் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாகக் கையாண்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திராயனின் மாதிரியைத் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
இதில் விக்ரம் லேண்டரிலிருந்து பிராக்யான் ரோவர் இறங்குவது போல் மாணவர்கள் தயாரித்ததோடு,தங்களது முகத்தில் சந்திரயான் 3 விண்கலம் மற்றும் தேசியக் கொடியை வரைந்து அசத்தினர்.
இது குறித்து பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கூறுகையில், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தை மாணவ,மாணவிகளும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், கோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரிப் பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குநர் வீரமுத்துவேல் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதைப் பள்ளி மாணவ,மாணவிகள் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தனர்.