பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டி

கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை நடைபெறுகின்றது

கடந்த 56 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 57-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2023 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இதுகுறித்து, பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – இவ்வாண்டு 57-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 26 ம் தேதி முதல் 30- ம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு கூடைப்பந்து கழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெறவுள்ளது.

இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாட எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

போட்டி அணிகள்

பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அணியில் இந்தியக் கப்பல் படை அணி – லோனாவாலா, பேங்க் ஆஃப் பரோடா அணி – பெங்களூரு, இந்திய இராணுவ அணி – புது தில்லி, இந்தியன் வங்கி அணி – சென்னை, வருமான வரி துறை அணி – சென்னை, சுங்க வரி அணி- புனே, கேரளா மாநில மின்சார வாரிய அணி – திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி – திருவனந்தபுரம் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளவுள்ளது.

பரிசுத் தொகை

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000.00 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 15,000.00 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000.00 பரிசாக வழங்கப்படும்.

போட்டிகள் வரும் 26.08.2023 முதல் தினமும் மாலை 5 மணிக்குத் துவங்கும். இதனை கோவை மாநகராட்சி ஆணையாளர்  பிரதாப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைக்கிறார். கௌரவ விருந்தினராக பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் பிரகாசம் கலந்து கொள்கின்றார். பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி முன்னிலை வகிக்கிறார்.

ஆகஸ்டு 30 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகளை வழங்குகிறார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றார்.