கோவை காரமடையில் தடுப்பில் மோதிய அரசு பஸ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் காரமடை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய வாகனம், சாலையோர தடுப்பில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து கழக அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு, மேட்டுப்பாளையம் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்த பயணிகள், மற்றொரு வாகனம் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவகையில், சேதம் அடைந்த தடுப்புகளை பத்திரமாக அகற்றி அப்புறப்படுத்தினர். அரசு பஸ் விபத்து குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.