கோவையில், குடிபோதையில் மோதல் சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சின்னான்(24). இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னான் அதே ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த உலகராஜ்(23) என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த உலகராஜ் இரும்பு கம்பியால் சின்னானை தாக்கினார். தாக்குதலில் அவருக்கு நெற்றி, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் உலகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.