10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவரை மீட்க ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி

கோவை கரும்புக்கடையைச் சேர்ந்தவர் பாத்திமா. உடல்  நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் என்பவர் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா திங்கட்கிழமை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில், தனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருப்பதாகவும், தனது கணவரை குறைந்தபட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும், என்று பாத்திமா வலியுறுத்தினார்.