பொள்ளாச்சி – அம்பராம்பாளையம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15) திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதியில் இருந்த பயிற்சியாளரிடம் விட தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.
பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன் கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஜாகிர் உசேன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்ட்டு பின்னால் வந்த வேனின் முன்பகுதியில் விழுந்து கண்ணாடி நொருங்கியது. இதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் உயிரிந்த ஜாகிர் உசேனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.