கோவையில் நடந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது

கோவையில் சத்யபாண்டி என்ற ரவுடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான தில்ஜித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சத்தியபாண்டியைக் கொலை செய்தது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த தில்ஜித்தை போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்த தில்ஜித் திங்கட்கிழமை  இரவு கோவை வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது, போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது அவர் கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது. போலீசார் அவரைக் கைது செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியின்  கால் முறிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.