நேர்முகத்தேர்வுக்குச் சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலி!

சேலம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் அருண் குமார்(20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ மெக்கானிக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பரான சக கல்லூரி மாணவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார்(20) என்பவருடன் பைக்கில், கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள சென்றார்.

பின்னர், அதனை முடித்து கொண்டு இருவரும் பைக்கில் தங்களது அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். குரும்பபாளையம் – காளப்பட்டி ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த சேலத்தை சேர்ந்த அருண் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

காயமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அருண்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.